31.7.09

முதல் அலுவலகம்

13579 -இது
என் அடையாள எண்...
இன்று வரை மட்டுமே...

நான் பயன்படுத்திய
கணிப்பொறியும், இருக்கையும்
இனி யாருக்கோ?
ஆனால்,
என் அலுவலகம் உள்ள வரை,
இந்த அடையாள எண்
குறிப்பது என்னை மட்டுமே...

குடும்பம், நட்பு என்று
வீட்டுப் பறவையாக
இருந்த என்னை,
வெளி உலகை
காண்பித்தது,
இவ்வலுவலகம் தான்...

தாமதம் செய்யாதே....
பொறுமை பழகு....
கோபம் கொள்ளாதே....
பிறருடன் அளவாக பேசு...
எச்சரிக்கையாய் இரு....
இது போன்ற,
இன்னும் பல ஆலோசனைகளை,
செவிவழி கேட்டிருந்தாலும்,
அனுபவப்பட்டு கற்றது,
என் அலுவலகத்தில் தான்...

எனக்கு முதல்
வேலை வாய்ப்பளித்த,
என் அலுவலகமே!!!
இன்றுடன் உன்னை பிரிகின்றேன்...
முதல் பள்ளி,
முதல் வண்டி,
வரிசையில்,
இன்று நீயும் - என்
"முதல் அலுவலகம்"
என் உயிர் உள்ள வரை...

30.7.09

காதல்



நற்குல கண்மணிகள்,
நசிவதில்லை காதலிலே
பொற்குவளையம் ஆகுவார்,
தன்குலச் சரித்தினிலே...
முண்டங்களும், பிண்டங்களும்
முடங்குவார் இதிலே...
தண்டங்கள் இவர்களும்,
தரணியில் ஏனோ?

குறிப்பு : சத்தியமா இத நான் எழுதல...

29.7.09

உயிர் கொடு....



இன்பத்தில்,
என்னை அலங்கரித்தாய் ....
துயரத்தில்,
என்னை செதுக்கினாய் ....
கோபத்தில்
என்னை காயப்படுத்தினாய் ...
யாரையோ காதலித்து,
என்னை கற்பமாக்கினாய் ....
சமூகப் பற்றுற்றபோது,
என்னை ஆயுதமாக்கினாய்....

ஆக,
உன் உணர்ச்சிகளுக்கு
நான் பலியானேன்...

என்னை,
உன் திறமை என்றாய்...
உன் படைப்பு என்றாய்...
உன் எழுத்து என்றாய் ...
உன் உணர்வின் வெளிப்பாடு என்றாய்...

உண்மையில்,
உன் அடிமை நானானேன்...

யாரென்று கேட்கிறாயா?
சொல்கிறேன் கேள்..

தாகூரின் மடியிலே தவழ்ந்து,
பாரதியின் வார்த்தையில் விளையாடி,
தாசனின் பேனாவில் இளைப்பாறினேன்....

இன்று,
உன்னில் அகப்பட்டு,
"கவிதை" என்றானேன்....

என்ன செய்தாய்
என்னைக் கொண்டு?

வெற்று காகிதத்தில்
எனைப் படைத்து,
காகிதத்திற்கு மட்டுமே
உயிர் தந்தாய்...

ஆனால் நானோ ,
பொட்டலமாகவோ,
துடைக்கவோ
பயன்பட்டு,
நடைபிணமாய் திரிகின்றேன்...

படைத்த என்னை
எப்போது உயிர்பிப்பாய்?

உன் சொல்லாற்றல், எழுத்தாற்றல்
என்னைப் படைக்கும்...
உன் செயலாற்றல் மட்டுமே
எனக்கு உயிர் கொடுக்கும்....

அப்போது தான்
நான் உயிர்பெற்று,
உன் சிந்தனையின் வடிவமாய்,
உன் ஊக்கத்தின் தூண்டுகோலாய்,
உன் வெற்றியின் காரணமாய்,
உனக்குப் பின்னும்,
இவ்வுலகுள்ள மட்டும்
உன் பெயர் தாங்கி
அழியாதிருப்பேன்...

உயிர் கொடு....
உன் வெற்றியை பறைசாற்ற,
தோல்வியில் உன்னை ஊக்கப்படுத்த,
காதலிக்கு விருந்தாக்க,
சமூகத்தை மேம்படுத்த,
உயிர் கொடு.... எனக்கு
உயிர் கொடு...

பிரிவு



அங்கோர் மலர்
தென்றலின் தோளில் சாய்கின்றது...
தேடலின் பார்வையா? இல்லை
பிரிதலின் தேடலா?
அன்பினில் அரவணைப்பில்
இத்தனை பாரமா பிரிவு?

இமயங்கள் இதயத்தை இடித்தது...
இறைவா... வேதனையின் வடிவு இதுவோ?
இயற்கையின் படைப்பில்
இதுதான் வலியதோ?
வலியதைப் படைத்தவனே!
வலியையும் ஏன் படைத்தாய்?

கண்ணீரின் சுமை
கனலின் புழுவாம்
அறிந்தும் அறியாதவனோ
தெரிந்தும் ஏன் பிரிக்கின்றாய்??

28.7.09

இனிப்பு பணியாரம்

நாம் எப்பொழுதும் மாவுடன் வெல்லம் சேர்த்து இனிப்பு பணியாரம் செய்வோம்.ஆனால் வெல்லம் சேர்த்துள்ளதால், பணியாரம் சரியாக வேகாமலே அடிபிடித்து விடும். இதைத் தவிர்க்க வெல்லம் சேர்க்காமல், முதலில் பணியாரம் செய்து விட்டு, பிறகு வெல்லத்தை தனியாக நீர் விட்டு காய்ச்சி, வடித்து,பிறகு பணியாரத்தை ஊற வைத்தால், சாப்பிட ருசியாக இருக்கும்.

கொறிக்க மட்டும்

CANDY CONDUCTOR
நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்தில் செல்ல நேர்ந்தது. அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு செல்லும் போது, பேருந்தில் அதிக நெரிசல்.என்னிடம் சரியான சில்லரை இல்லை.
கண்டக்டரிடம் திட்டு வாங்க வேண்டுமே என்று பயந்து 10 ரூபாயை நீட்டு ஒரு 4.50 என்றேன். அவர் ,"கூட்டத்த பாரும்மா.. சில்லரையா வெச்சுக்க வேண்டியது தானே " என்று டிக்கட்டையும்,5 ரூபாயயும் கொடுத்தார்... உடனே நான், "50 பைசா பரவால்ல" என்றேன்...உடனே அவர் "அதுவும் காசு தானே" என்று 50 பைசா மதிப்புள்ள சாக்கலேட் ஒன்றை கொடுத்து, "50 காசு சில்லர சரியா கிடைக்கிறதுல்ல... அதனால்ல தான்" என்றார். எனக்கு மட்டமல்ல...அனைவருக்கும் 50 பைசாவிற்கு பதிலாக சாக்கலேட் தான் கொடுத்தார். அனைவருக்கும் சிரிப்பு. ஒரு வயதான் பாட்டி அவரை நேரடியாகவே பாராட்டி விட்டார்.ஒரு கல்லூர் பெண் அவள் தோழியிடம், "ஏய், இனி இவர் candy conductor டி" என்று சிரித்துக் கொண்டாள்...

அன்புத் தோழி !!!


அன்புத் தோழி கோவில்பட்டி வீரலட்சுமி!!!
பள்ளியில் முதல் பெஞ்சில் இருந்த என்னை
கடைசி பெஞ்ச்சுக்கு பாதை காட்டிய -நீ
ஒரு வழிகாட்டி...

கல்லூரிக்குள் இருந்த என்னை
சினிமா தியேட்டர் செல்ல,
கல்லூரி சுவர் ஏறி
குதிக்க உதவிய - நீ
ஒரு ஏணி...

கணிணி கற்ற என்னை
ஊர் சுற்ற கற்றுக் கொடுத்த - நீ
ஒரு ஆசான்...

தலைப் பின்னலுடன் இருந்த என்னை
தலை விரி கோலத்துடன்,
அலைய வைத்த - நீ

ஒரு அழகுக்கலை நிபுணி...
நூலகத்தில் சதா
கருத்துக்களை விழுங்கும் என்னை
கேண்டீனில் சதா மசால் தோசை
விழுங்க செய்த - நீ
ஒரு அன்னபூரணி...

வகுப்பில் அவுட்ஸ்டேண்டிங் - ஆக
இருந்த என்னை
வகுப்பை விட்டு
அவுட் ஸ்டேண்டிங் ஆக்கிய - நீ
ஒரு உத்தம புத்திரி...

என்றும் மறக்க முடியாது
நாம் காப்பி அடிக்க நீ
வைத்திருக்கும் பிட்டு பேப்பரும்
மாட்டினால் நீ போடும் போலி மயக்கமும்...

இப்படி மேலும் சொல்வேன்
உன் அருமை பெருமைகளை(!!!)...
காலம் பல சென்றாலும்
நம் சாதனைகளை(!!!!!) இன்றும்
நம் ஆசிரியர்கள் பேச (திட்ட) தான் செய்கிறார்கள்...

நம் அரசியலில் இதெல்லாம்
சாதாரணம் என்றாலும் இவை
இன்றும் என் மனதில்
பதிந்துள்ளன பசுமரத்தாணியாய்...

இப்படிக்கு
உன் அன்புத் தோழி

தயிர் போண்டா

தேவையான பொருட்கள் :
மைதா - 2 கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 1 (சிறிதாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (சிறிதாக நறுக்கியது)
நீர் - 3/4 கப்
உப்பு -தேவைக்கேற்ப
செய்முறை :
கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக கலந்து, கெட்டியான மாவு பதத்திற்கு கரைத்து வாணலியில் எண்ணெய் காய வைத்து, சிறிது, சிறிதாக போட்டு பொன்னிறமாக சிவந்ததும் எடுக்கவும் ...

கொறிக்க மட்டும்

மலைக்கோட்டை மாநகரில் ஜூலை 20 முதல், தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்றொரு நன்மையும் அரங்கேறியுள்ளது. முன்பெல்லாம் வாகன ஓட்டிகள், அலைபேசியில் பேசிக்கொண்டே வாகனம் ஓட்டுவர். தற்பொழுது இதற்கு தலைகவசம் தடையாக இருப்பதால், வாகனத்தை நிறுத்தி பேச வேண்டியுள்ளது. இதனால் விபத்துக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம்...

24.7.09

முதல் மேடைப் பேச்சு

நான் ஒன்னாவதுல இருந்து அஞ்சாவது வரைக்கும் வீட்டு பக்கத்துல ஒரு சின்ன ஸ்கூல்ல படிச்சேன். அங்க என் அண்ண்ன் ரெண்டு பேரும் படிச்சதால எனக்கு ஸ்பெஷல் கவனிப்பா இருக்கும். எந்த ஃபங்ஷனா இருந்தாலும் என்ன மேடை ஏத்திடுவாங்க. அட பேச தாங்க.என்னோட முதல் மேடை பேச்சு பத்தி சொல்றேன் கேளுங்க. அப்ப சின்ன பொண்ணுங்க நானு. அஞ்சே அஞ்சு வயசு தான். ஒரு நாள் எங்க டீச்சர் க்ளாஸ் நடத்தும் போது பக்கத்து க்ளாஸ் டீச்சர் வந்து எங்க டீச்சர கூப்பிட்டு ஏதோ பேசிட்டு இருந்தாங்க. டீச்சர் இல்லாத தைரியத்துல நானும் பைக்குள்ள இருந்த மிட்டாய தூக்கி வாயில போட்டேன்.

திடீர்னு எங்க டீச்சர் வந்து, "குமாரோட தங்கச்சி, இங்க வா" அப்டின்னு சத்தமா கூப்டாங்க.ஐயோ.. மிட்டாய் சாப்பிட்டத பாத்துட்டாங்க போலன்னு நெனச்சுக்குட்டு, வாயில இருந்த மிட்டாய வேகமா சட்ட பாக்கெட்ல போட்டுட்டு பயந்துக்கிட்டே போனேன். என்னய கூட்டிட்டு போய் பெரிய க்ளாஸ் டீச்ச்ர் கிட்ட எல்லாம் இவ தான் இவ தான்னு காமிச்சாங்க. அப்புறம் நாளைக்கு உங்க அம்மாவ கூட்டிட்டு வான்னு அதட்டலா சொன்னாங்க. நான் அப்புடியே ஆடி போயிட்டேன். இத்துனூண்டு மிட்டாய் சாப்ட்டதுக்கு அம்மாவெல்லாம் வர சொல்லிட்டு. சின்ன ள்ள தனமா இல்ல.. க்ளாஸ்க்கு வந்ததும், பய புள்ளைங்க ஏதோ குத்தவாளிய பாக்குற மாதிரி பாத்துச்சுங்க...

பக்கத்து வீட்டு அம்முவும் என் க்ளாஸ் தான். நானும் அவளும் ஒன்னா தான் ஸ்கூலுக்கு போய்ட்டு வருவோம். எங்க அம்மா கிட்ட சொல்லாதன்னு அவளுக்கு நெல்லிக்காய் எல்லாம் வாங்கி குடுத்தேன். வீட்டுக்கு வந்த உடனே,"அத்த, ஸ்கூல்ல என்னாச்சு தெரியுமான்னு " அப்புடியே எல்லாத்தையும் ஒப்புச்சிட்டா. அது மட்டுமா... எங்க அம்மா இப்புடி யார் சொன்னாலும் நம்ம மாட்டாங்க. அப்புடி ஒரு நம்பிக்கை.ஆனா ஆதாரத்துக்கு சட்டைல வச்ச மிட்டாய் இருக்கே. வெள்ள சட்டைல ஆரஞ்சு கலர் ஒழுகி உவ்வ்வேவா இருந்துச்சு. அத பாத்ததும் எங்க அம்மாவுக்கு வந்த கோபத்த பாக்கணுமே. என்ன துவைச்சதுல, சட்டல இருந்த கறை காணாம போயிடுச்சு.

அடுத்த நாள் ஸ்கூலுக்கு அம்மாவும் வந்தாங்க. வர வழியெல்லாம் ஒரே திட்டு."ஆம்புள பிள்ளைங்களுக்கு கூட நான் ஒரு நாளும் போய் யார் முன்னாடியும் நின்னதுல்ல. பொட்டச்சி இப்டி பண்ண்ட்டளே" அப்புடின்னு ஒரே திட்டு. இந்த அம்முவுக்கு அப்புடி ஒரு சந்தோசம். வாழ்க்கையே வெறுத்து போய் ஸ்கூல் போனேன். அங்க நெறைய டீச்சர் இருந்தாங்க. அவங்க எல்லாருமே தெரிஞ்சவங்க தான். அதனால் என்னைய விட்டுட்டு, அம்மா மட்டும் போனாங்க...ஒரு பெரிய பேப்பர காமிச்சு அம்மாகிட்ட ஏதேதோ சொன்னாங்க. தம்மாத்துண்டு மிட்டாய்க்கு இவ்ளோ பெரிய குற்ற பத்திரிக்கையான்னு நொந்துட்டேன். பேசி முடிச்சிட்டு அம்மா வீட்டுக்கு வா பாத்துக்குறேன்னு போனாங்க.

சாயந்திரம் வீட்டுக்கு அடி வாங்க தயாரா போனேன். ஆனா வீட்டுல நடந்ததே வேற. காபி, ஸ்நாக்ஸ்னு ஓவர் உபசரிப்பா இருந்தது.அப்புறம் தான் அம்மா சொன்னாங்க ஸ்கூல் ஆண்டு விழால நான் பேசனுமாம். அத சொல்ல தான் அம்மாவ வர சொன்னாங்களாம். எனக்கு ஒரே பெருமை.நான் கூட சும்மா ஏதோ பேசுறதுக்கு இப்டி கவனிக்கிறாங்க.இப்டின்னா தினமும் ஸ்டேஜ்ல பேசலாம்முன்னு கனவுக்குதிரைய ஓட்டுனப்ப, டீச்சர் குடுத்த அந்த 4 பக்க பேப்பர அம்மா காமிச்சு, இத மனப்பாடம் பண்ணுமான்னாங்க.எனக்கு தலையே சுத்திடுச்சு.அப்ப தாங்க அ,ஆ வே எழுத கத்துக்கிட்டேன். என்கிட்ட போயி இப்புடில்லாம்...........

சரி நம்பள நம்பிட்டாங்க. செய்வோம்னு என்ன நானே தேத்திக்கிட்டேன்.அந்த நம்பிக்க தாங்க ஒரு மாச கிரஹமா என்னையே சுத்துச்சு...அடுத்த நாள் ஸ்கூல் போனதும் டீச்சர் பக்கத்துல நிக்க வச்சு ஒரு ஒரு பத்தியா வாசிக்க சொல்லிக்குடுத்தாங்க.கிரஹம் இப்ப தான் வேலைய காட்ட ஆரம்பிச்சிருக்கு .எப்டின்னா, லஞ்ச்-லயும் கேம்ஸ் பீரியட்லயும் எல்லாரும் விளையாடுவாங்க. நான் மட்டும் பாவமா டீச்சர் கூடவே இருப்பேன். 3 நாள்ல ஃபுல்லா பாத்து வாசிக்க கத்துக்கிட்டேன். அப்புறம் அந்த கிரஹம் என் மேலயே பெர்மனன்ட்டா ஒரு மாசத்துக்கு ஸ்டே பண்ணிடுச்சு...

அப்புறம் ஒரு ஒரு பத்தியா மனப்பாடம் பண்ண சொன்னாங்க. மனப்பாடம் பண்ணி ஒப்பிக்கும் போது தப்பா சொன்னா, இல்ல மறந்தா, எங்க டீச்சர் எப்புடி அடிப்பாங்க தெரியுமா. நான் எப்பவுமே டீச்சர விட்டு ஒரு ஸ்டெப் தள்ளி தான் நிப்பேன். ஏனா இந்த பொசிஷன் அடிக்க வசதியா இருக்காதுல்ல. ஆனா, ஆனா, டீச்ச்ர் என் சட்ட காலர இழுத்து அவங்களுக்கு வசதியா நிக்க வச்சு அறைவாங்க. நினச்சா இப்பவும் வலிக்குது.... அந்த சமயம் பாத்து எங்க அம்மா வருவாங்களா. அவங்கள பாத்து ரொம்ப அழுவேன்.அத பாத்துட்டு எங்க அம்மா உடனே டீச்சர் கிட்ட வேகமா வந்தாங்க. அடிக்காதிங்கன்னு சொல்லுவாங்கன்னு பாத்தா,"என்ன டீச்சர் இன்னுமா தப்பா சொல்றா? கரெக்ட்டா சொல்ற வரைக்கும் விடாதிங்கன்னு" சொன்னாங்க. எங்க அம்மா என் கண்ணுக்கு வில்லி நடிகை Y.விஜயா மாதிரி தெரிஞ்சாங்க.

ஸ்கூல்ல மட்டுமா? வீட்டுக்கு போனா அண்ணன்ங்க கிட்ட ஒப்பிக்கணும். அவங்க கிட்ட தப்பா சொன்னாலும் அடி விழும்.சரியா சொன்னாலும் ,"இப்புடி கரெக்ட்டா சொன்னீனா உன்ன எப்புடி அடிக்கிறது ... தப்பா சொல்லுன்னு "அடி விழும். அவங்கள முன்னாடி அப்பாகிட்ட அடி வாங்க வச்சத அந்த ஒரு மாசத்துல பழி தீர்த்துட்டாங்க.

அப்டியே ஒரு மாசம் போய்டுச்சு. நானும் நல்லா மனப்பாடம் பண்ணி, பேசவும் கத்துக்கிட்டேன்.இவ்ளோ சொன்னேன். எத பத்தி பேசுறென்னு சொல்லல பாருங்க. ஏனா நான் பேசுற வரைக்கும், ஏன் அதுக்கப்புறமும் தெரியாது. மூணாவது படிக்கும் போது தான் நான் பேசுனது காமராஜரப் பத்தின்னு எனக்கே தெரியும்.... இதுக்கு பேரு தான் "மொட்ட மனப்பாடம்". சரி அத விடுங்க...

அப்டி இப்டின்னு ஆண்டு விழா வந்துச்சு. காலைல தலைக்கு குளிப்பாட்டி, செம்ம மேக் அப். என் கைய விட பெரிய,அம்மாவோட வாட்ச்ச கட்டி விட்டாங்க. செயின், மோதிரம் எல்லாம் போட்டு அம்மா, அண்ணன்கள், பக்கத்து வீட்டு அக்காக்கள்,அண்ணன்கள் எல்லாரும் ஒரு கூட்டமா ஸ்கூலுக்கு கூட்டிட்டு போனாங்க. எனக்கு ஒரே சந்தோஷம்.

அந்த சந்தோஷமும் கொஞ்ச நேரம் தான் நிலைச்சது. ஸ்டேஜ்
கிட்ட நின்னதும் கூட்டத்த பார்த்ததும் ஆடி போயிட்டேன். எங்க ஸ்கூல்ல இவ்ளோ பேர் படிக்கிறாங்கன்னு அப்ப தான் தெரியும். ப்ரொக்ராம் ஆரம்பிச்சது... கொஞ்ச நேரம் கழிச்சு ,"இப்பொழுது ஒன்றாம் வகுப்பு மாணவி பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி உரை ஆற்றுவாள்" அப்புடின்னு ஒரு வாய்ஸ். அப்ப கூட நான் தான் பேச போறேன்னு எனக்கு தெரில்ல..உடனே மைக் ஹைட்ட குறைச்சாங்க. என்ன ஸ்டேஜ்ல ஏத்தி விட்டு மெதுவா
காதுல ,"தைரியமா அது முன்னாடி நின்னு பேசுன்னு" டீச்சர் மைக்க காமிச்சு சொன்னாங்க.தைரியத்துக்காக அம்மா, அண்ணன்கள பாத்தேன். கண்ணுக்கு எட்டின தூரம் வர அவங்க இல்ல. அவங்கள பாத்தா சரியா பேச மாட்டேன்னு அவங்கள மறைச்சு வச்சுட்டாங்க..சரி போங்கடான்னு, மைக் முன்னாடி நின்னு ,"அனைவருக்கும் வணக்கம்" அப்புடின்னு சொன்ன நிமிஷம் , அங்கங்க "அனைவருக்கும் வணக்கம்" எகோ அடிச்சது. அத்தன ஸ்பீக்கர்.எனக்கு உலகமே இருண்டு போச்சு. அப்புடியே டீச்சர ஒரு லுக் விட்டேன்."ஒழுங்கா பேசு"ங்கற மாதிரி ஒரு மொற மொறச்சாங்க பாருங்க... பேசாம கீழ போனா அடி விழுமே.. அத நினச்சுக்கிட்டே ரெடி... ஜுட்... "இப்பொழுது நான் பேச எடுத்துக் கொண்டுள்ள தலைப்பு " அப்புடின்னு ஆரம்பிச்சு "அவர் நாமம்
போற்றுவோமாக. அனைவருக்கும் நன்றி" அப்புடின்னு முடிச்சதும்மே.... யாரோ வந்து தூக்கிட்டு போய்ட்டு எங்க க்ளாஸ்ல உக்கார வச்சாங்க.

டீச்சர் எல்லாரும் வந்து நல்லா பேசுனா அப்புடின்னு அவங்களுக்குள்ள பேசிக்கிட்டாங்க. எங்க அம்மா வந்து ட்ச்,செயின்,மோதிரம் எல்லாத்தையும் கழட்டிட்டு போய்ட்டாங்க."இவ்ளோ தான் உலகமா" அப்டின்னு வெறுத்து வீட்டுக்கு போனேன். வீட்டுல எனக்கு கிஃப்ட்டா அப்பா ஷு வாங்கி வச்சிருந்தாங்க. அப்புடி ஒரு சந்தோஷம்..... அப்ப ஸ்டேஜ்ல பேச ஆரம்பிச்சது..... எனக்கு அது ஒரு நல்ல அடித்தளமா இருந்தது... என்ன பேச வச்ச ஜோஸ்பின் டீச்சர், உக்குவிச்ச, அம்மா, அப்பா, அண்ணன் எல்லாருக்கும் என் மனமார்ந்த நன்றிகளை கூறி இத்துடன் இத்துடன் இந்த உரையை முடித்துக் கொள்கிறென்.
நன்றி... வணக்கம்

21.7.09

ஆட்குறைப்பு


முன்பு வாழ்ந்த,
சிறிய வீடு மீண்டும்
வாடகைக்கு கிடைக்காதா என
தவிக்கிறேன்....

வீட்டை அசிங்கப்படுத்துவதாய்
எண்ணிய, அப்பாவின்
பழைய மிடிவண்டியை
புதுப்பிக்கிறேன்....

பீஸா, பர்கர்
தவிர்த்து,
அம்மா சமைத்த உணவையே
உண்கிறேன்...

ஆடம்பரமான பொருட்களை
விடுத்து, அத்யாவசியப்
பொருட்களை மட்டுமே
வாங்குகிறேன்...

இன்னுமா புரியவில்லை?
என் அலுவலகத்திலும்
தொடங்கிவிட்டார்கள்
"ஆட்குறைப்பு" ....

17.7.09

க........கா.............க - 3


ஆதவன் தோற்றுப் போனது!!!
உன் ஜொலிப்பினைப் பார்த்து......
பட்டாம்பூச்சி தோற்றுப் போனது!!!
உன் மென்மையான உடலைப் பார்த்து....
ரோஜாவும் தோற்றுப் போனது!!!
உன் சிவந்த உதட்டினப் பார்த்து...
கார்மேகம் தோற்றுப் போனது!!!
உன் கருங்கூந்தலைப் பார்த்து...
இத்தனையும் தோற்றுப் போக...
நானும் தோற்றுப் போனேன்...
"என் திருமணம்" என்று நீ
திருமண அழைப்பிதழ் தந்த போது...

குறிப்பு : க .......... கா .............. க => கணவரின் காதல் கவிதைகள்

14.7.09

க..........கா..............க - 2



நீ பார்க்கும் போதெல்லாம்
நானும் பார்க்கிறேன்...
நீ பேசும் போதெல்லாம்
நானும் பேசுகிறேன்.....
நீ சிரிக்கும் போதெல்லாம்
நானும் சிரிக்கிறேன்...
நீ அழும்போதெல்லாம்
நானும் அழுகிறேன்.....
நீ மணமகளாய் ஆனபோது,
நானும் மணமகனானேன்.....
ஆனால்,
உனக்கு கணவன் எவனோ?
எனக்கு மனைவி எவளோ?

குறிப்பு : க .......... கா .............. க => கணவரின் காதல் கவிதைகள்

12.7.09

க .......... கா ........... க - 1

கண்ணாடி
முன்னாடி
நின்னேனடி....
பார்த்தேன்...
எனக்கு
பரு இல்லாத
முகம் இருந்தது...
முளைத்த,
அரும்பு மீசை
எங்கே காணவில்லை?
மீனைப் போன்ற

விழிகள்

அட எனக்கா?
ரோஜா இதழ்
உதடுகள்
என்னிடமா?
கார்முகில் போன்ற
கூந்தல்,
எனக்கா?
ஆச்ச்ர்யப்பட்டேன்!!!!
அப்புறம் தானடி
தெரிந்தது....
கண்ணாடியில் ,
தெரிந்தது நானல்ல...
எனக்குள் இருந்த
நீ !!!!!!!!!!!!!!!!

குறிப்பு : க .......... கா .............. க => கணவரின் காதல் கவிதைகள்

10.7.09

காஃப் லவ்

என் திருமணம் நான்கு வருட காதல், ஒரு வருட போராட்டத்திற்கு பின் கடந்த ஜுன் 14 2009 அன்று எங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள்
முன்னிலையில் எளிமையாக நடந்து முடிந்தது.
கடந்த 5 வருடத்தில் நான் அவருக்கு பல கவிதைகள் எழுதி
கொடுத்துள்ளேன். ஆனால் அவரிடம் இருந்து காதல் வார்த்தைகள் கூட கிடைத்ததில்லை. சரி அவரிடம் எந்த திறமையும் அல்ல என்று நினைத்துக் கொள்வேன்.
திருமணத்திற்கு பின் ஒரு பேப்பர் கற்றையை கொடுத்து படிக்க சொன்னார்.அதில் இருந்தவை அனைத்தும் கவிதைகள். அதுவும் காதல் கவிதைகள். என்னால் நம்பவே முடியவில்லை.அனைத்தையும் படித்துவிட்டு அவரிடம் கேட்டேன். "என்ன நினச்சு இவ்ளோ அழகா எழுதிருக்கீங்க. இதுல ஒரு கவிதைய கூட எனக்கு ஏன் கொடுக்கல" என்று கேட்டேன்.அதற்கு அவர் பதில் என்ன தெரியுமா???
"உன்ன நினச்சு கவித எழுதிட்டு இருந்தா பொழப்ப யார் பார்க்குறது" என்று பொறுப்பான் ஆண்மகனாக பேசினார்.உள்ளூர கோபம் இருந்தாலும், அவர் கடமை உணர்ச்சியை நினைத்து பெருமை பட்டுக் கொண்டேன். சரி. எப்பொழுதோ கற்பனையாக நினைத்து எழுதியிருப்பார் என்று விட்டு விட்டேன். நான் கவிதைகளை வாசித்துக் கொண்டு இருந்தேன்.சிறிது நேரம்
கழித்து அவரும் ஒரு கவிதையை படித்து விட்டு என்ன சொன்னார் பாருங்களேன்.

"இதெல்லாம் once upon a time அவள நினச்சு எழுதுனது... நினச்சாலே எவ்ளோ சுகமா இருக்குது" என்று விட்டத்தைப் பார்த்தார். "யார் அவள்" என்ற கேள்வியுடன் என் கண்களில் கங்கை பெருக்கெடுத்தது... உடனே அவர் பதற்றத்துடன்....."அச்சோ நீ நினைக்கிற மாதிரி ஒன்னும் இல்ல.... அது calf love டா." என்று தொடங்கி கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்ன ஒவ்வொரு விஷயமும், மிக அழகாக ஒரு 14 வயது வாலிபனுக்கே உரிய காதல் உள்ளத்துடன் இருந்தது.பிறகு அவரிடம் கேட்டேன். " இவ்ளோ சின்சியரா லவ் பண்ணி இருக்கீங்க, கொஞ்சம் முயற்சி பண்ணி அவங்களையே கல்யாணம் பண்ணி இருக்கலாமே" . அதற்கு அவர் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது. "நான் அவள லவ் பண்ணப்ப எனக்கு 14 வயசு. அவள பார்த்தேன் அழகா இருந்தா(நான் இடை மறித்து, அப்ப நான் அழகா இல்லயா என்றேன். உடனே அவர், சின்ன வயசுல கழுத குட்டி கூட குதிர மாதிரி அழகா இருக்கும் என்று நக்கலடித்தார்.நான் கப்சிப்). அடிக்கடி அவள பார்க்கனும்னு தோணுச்சு... பேசனும்னு தோணுச்சு. பட் ப்ரப்போஸ் பண்ணும் போது அவ கிட்ட எனக்கோ, என்கிட்ட அவளுக்கோ எந்த எதிர்பார்ப்பும் கிடையாது.யாரும் பார்த்துடுவாங்களோ- னு பயந்து பயந்து பேசுவோம். அதெல்லாம் த்ரில்லிங் எக்ஸ்பீரியன்ஸ் டா. அவள பார்த்தது ஒரு 3 மாசம். பேசுனது ஒரு 4 மாசம். தட்ஸ் ஆல். அதுக்கு அப்பறம் கொஞ்ச நாள் சண்ட....கொஞ்ச நாள் சமாதானம்.பட் நிறைய விஷயம் எங்களுக்கு ஒத்து போகாது. அப்பறம் ரெண்டு பேருமே டென்த் முடிச்சோம். தென் அவ வேற ஸ்கூல் போய்ட்டா. அப்பப மீட் பண்ணும் போதும் சண்ட தான். என்ன நினச்சானு தெரில. பார்க்குறத குறச்சுக்கிட்டா... பேசுறத குறச்சுக்கிட்டா...... தென் சுத்தமா அவாய்ட் பண்ணா.... நானும் நிறைய தடவ கான்டக்ட் பண்ண ட்ரை பண்ணேன்... அவாய்ட் பண்ணிட்டே இருந்தா.அப்பறம் நானே தாவணி போனா சல்வார் கமிஸ் உள்ளதடான்னு மனச தேத்திக்கிட்டேன்."
உடனே நான் "அப்ப அந்த சல்வார் கமீஸ் நான் தானா?... என்னையும் இப்டி தான் விளையாட்டுக்கு லவ் பண்ணீங்களா?" என்றேன்...அதற்கு அவர் "அட லூசு.... உன் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணும் போது... உன்ன பத்தி எனக்கு தெரியும். என்ன பத்தி உனக்கு தெரியும். எனக்கு பிடிச்ச மாதிரி நீ இருந்த.... உனக்காக எத வேணும்னாலும் sacrifice பண்ணலாம்னு தோணுச்சு. because that much i admired your character. அப்பறம் தான் உன்கிட்ட ப்ரப்போஸ் பண்ணேன்.உனக்கும் என்ன பிடிச்சதுனால தான ஓகெ சொன்ன " என்று பொறுப்பாக பதில் அளித்தார்.
அவர் கூறியது போல எங்கள் இருவர் வீட்டிலும் பேசி சம்மதம் வாங்கினார்....எங்கள் திருமணம் 75% அவர் ஈடுபாடு மற்றும் உழைப்பினாலே நடந்தது....இறுதியாக அவர் "காஃப் லவ், காஃப் லவ் தான்" என்று முடித்தார்....

3.6.09

என் அருங்காட்சியகம்

அம்மா அடிக்கடி என்னை திட்டுவது இதற்காக தான் "வீடு முழுக்க குப்பைய சேர்த்து வைக்கறா.பழசானா தூக்கி போட வேண்டியது தானே" என்று....
அதெப்படி முடியும்... நடுத்தர குடும்பத்து பிள்ளைகளுக்கு கிடைக்கும் ஒவ்வொரு பொருளும் பொக்கிஷம் தான். அந்த பொருள் முதல் முறை நம் கைக்கு வந்ததும், நமக்கு கிடைக்கும் பெருமிதம், மகிழ்ச்சி... இன்றளவும் நினைத்தாலே இனிக்கிறது.. ஆனால் தற்பொழுது அதை விட அழகான, விலை அதிகமான பொருட்கள் வங்கினாலும் கிடைப்பதில்லை... அதனாலோ என்னவோ, நான் என் பொருட்கள் வீணானலும், வீசுவதில்லை..
இதோ என் அருங்காட்சியகத்தில் உள்ளவை (குப்பைத் தொட்டி-னு நீங்க நினைக்கிறது புரியுது)
அப்பா வாங்கி கொடுத்த ராஜா பொம்மை
பெரியம்மா வாங்கி கொடுத்த தோண்டி (குட்டி குடம்)
அப்பா வாங்கி கொடுத்த கைக்கடிகாரம்
பெரிய அண்ணா தந்த டெடி பேர்
மாமா வாங்கி தந்த பாவாடை
சின்ன அண்ணா முதன் முதலில் வாங்கி கொடுத்த ஹீரோ பேனா...
என்னோட ஸ்கூல் யூனிஃபாம்
ஜியாமென்ட்ரி பாக்ஸ்.
பல்லாங்குழி
முக்கியமானவங்க குடுத்த சக்கலேட் பேப்பர்
இப்படி இன்னும் நிறைய பொருள்கள் என் அறையை அலங்கறித்தவாறே(!!!) உள்ளன... அவைகளை ஒவ்வொரு முறையும் பார்க்கும் போதும், பழைய நினைவுகளை அசை போடும் சுகமே தனி தான்.

2.6.09

கனவு பலித்தது


தன்னழகு கொண்டு
இருமாந்திருந்த,
கடலும், மேகமும்
வெட்கித்தான் போகின்றன
அவளழகு கண்டு.....
அவைகளுக்கு தெரியாது...
நேற்று வரை அவள்,
குழந்தை தொழிலாளியாய்
கட்டுண்டு கிடந்தாள் என்று...
அவள் பள்ளிக்கனவு
பலித்த்தற்கான ஆரவாரத்துடன்
ஓடுகிறாள் இன்பமான
எதிர்காலம் நோக்கி......

குறிப்பு : பேசும்கவிதை போட்டிக்காக எழுதியது

1.6.09

நவரசம்

காதல்
--------
அன்பு, பாசத்தின் மறுவடிவம்..,
ஆயுள் வரை
தொடர்ந்தாலும்,
பருவ வயதில்
மட்டுமே பிரபலம்...

வீரம்
------
இறைவன் படைப்பில்
அனைத்து உயிர்களுக்கும்
பொதுவானது...
இதுவே,
தற்காப்பின் கருவானது...

சோகம்
---------
இழப்பின் வெளிப்பாடு.
தோல்வியின் வலி...
முயற்சியின் முட்டுக்கட்டை...

புன்னகை
------------
மனிதனை,
பிற உயிர்களினின்றும்,
பிரித்துக் காட்டும்...
பிற மனிதர்களினின்றும்
உயர்த்திக் காட்டும்....

வியப்பு
---------
புதிதாய் கண்டால்
பிறப்பது...


வெறுப்பு
-----------
ஆசையின் எதிராளி...
இது,
கோபத்தின் உச்சக்கட்டம்...

அச்சம்
---------
நன்மை செய்ய
இதனை,
ஏற்க வேண்டாம்...
தீமை நினைத்தாலே,
இதற்கு
அடி பணிய வேண்டும்...

சாந்தம்
---------
தக்க தருணத்தில்,
கடைபிடித்தல் நன்று...
இல்லையேல்
விளைவுகள் விபரீதம்..

கருணை
------------
இதைக் கொண்டால்,
மனிதன்,
இறைவனின் மறு உருவம்

29.5.09

பெருமிதம்????

"பொருளாதார தன்னிறைவு பெற்றோம்"
தொலைக்காட்சியில் அமைச்சர் உரை.....
"அம்மா தாயே சோறு போடும்மா"
வாசலில் பிச்சைக்காரர்.....

22.5.09

சாதிக்கப் பிறந்தேன்...

ஆறாத வடுவாய்
நேற்றைய தோல்விகள்...
முட்களாய் குத்தும்
உறவுகளின் இழிப்பேச்சுகள் ...
முயற்சியின் முட்டுக்கட்டையாக
தோல்வியின் அவமானம்....
ரணங்களை வார்க்கிறேன்
வார்த்தைகளாக...
மலர்ந்தது,
கவிதை மட்டுமல்ல...
தன்னம்பிக்கையும் தான்...
நம்பிக்கையால்
தகர்த்தெறியப்பட்டது
முட்டுக்கட்டைகள்...
இதில் வெளிப்பட்டது
விடாமுயற்சி...
முயற்சியின் பலன்தான்
இன்றைய சாதனை...
இது,
என் கவிதையின் வெற்றி...
கேட்டேன் அதன்,
வெற்றியின் ரகசியத்தை...
என் கவிதை சொன்னது,
" நான் சாதிக்க பிறந்தேன்" என்று...

20.5.09

வழி சொல்லுங்கள்...


வீட்டில் நான் போட்ட
சட்டத்தை மாற்றினாள் ....
பொறுத்துக் கொண்டேன்...
என் உடைமைகளை
அபகரித்தாள் ....
அமைதி காத்தேன் ....
கோபம் கொண்ட
போதெல்லாம் அடித்தாள்....
தாங்கிக் கொண்டேன்.....
அவள் தவறிழைத்த போதெல்லாம்
'அவள் உன்னை மாதிரி' என
அனைவரும் என்னை
வசை பாடினார்கள்
வாங்கிக் கொண்டேன்...

என் கட்டுப்பாட்டில்
இருந்த வீட்டை
அவள் கட்டுப்பாட்டிற்கு
மாற்றினாள்...
மன்னித்து விட்டேன் ....
என் பொறுமைக்கெல்லாம்
முற்றுப் புள்ளி வைக்கும் விதம்,
இன்று என்னையே அடக்கி,
"அத்தை!!! இனி நான் சொல்றத கேளு"
என்கிறாள் என் அண்ணன் மகள்.
அவள் ஆட்டத்தை அடக்க,
என் வீட்டாட்சியை மீட்க
வழி சொல்லுங்கள்...

18.5.09

பிரிவுகள் தாராயோ !!!

உப்பில்லை, உறைபில்லை என்று
அம்மாவின் சமையலை
குறை கூறாத
நாளில்லை...
விடுதியில் சாப்பிடும்பொழுது தான்
அம்மாவின் சமையலை
ருசிக்க நா ஊறுகின்றது.
அப்பாவிடம் சண்டை போட்டு
பணம் வாங்கிய மகிழ்ச்சியுடன்
'நானும் சம்பாதித்து செலவழிப்பேன்'
என்ற சபதமும் இருக்கும்.
நிறைவேறியது சபதம்
மட்டும் தான்.
அந்த மகிழ்ச்சி மட்டும்
எங்கு போனதோ
புரியவில்லை.
அக்காவுக்கு தெரியாமல்
அவள் பட்டு பாவடையை
அணிந்த போது
கிடைத்த ஆனந்தம்
அவள் திருமணத்திற்கு பின்,
அதே பாவாடையைக் காட்டி
இனி இதெல்லாம் உனக்கு தான்
என்று அம்மா சொன்ன போது
கிடைக்கவில்லை.
அண்ணனுடன் போட்டி போட்டு
சாப்பிட்ட அப்பளத்தின் ருசி
அண்ணன் வெளிநாடு
போன பிறகு
தனியாக எத்த்னை
அப்பளம் சாப்பிட்டாலும்
கிடைக்கவில்லை
விடுதிக்கு சென்ற போது தான்
அம்மாவின் அன்பு புரிந்தது...
வேலைக்கு சென்ற போது தான்
அப்பாவின் பாசம் புரிந்தது...
அக்காவின் திருமணத்திற்கு பின்பு தான்
அவளுடனான இணக்கம் புரிந்தது...
அண்ணன் வெளிநாடு போன பின்பு தான்
அவனுடனான நட்பு புரிந்தது...
இறைவா!!!
என் உறவுகளின்
இனிமை புரிய
தக்க தருணத்தில்
பிரிவுகள் தாராயோ!!!

15.5.09

மூளைக்கு வேலை !!!


14.5.09

துப்பாக்கி தேவை

காதலனின் தடாலடி
நீ சொன்னாய் என்பதற்காகத்தான்
உனது அப்பாவிடம் பேசிப்
பார்க்கலாம் என்ற முடிவுக்கு
வந்தேன். ' அலுவலகத்தில்
இருக்கிறேன், நீல்கிரீஸில்
சாயங்காலம் சந்திக்கலாம்' என
உன் தகப்பன் தொலைபேசியில்
சொன்னபோது கடமை தவறாதவரின்
மகளைத்தான்
காதலித்திருக்கிறோம் என
இறுமாந்திருந்தேன்.
சொன்னபடி ஐந்து
மணிக்கெல்லாம் வ்ந்தமர்ந்த
உன் தகப்பனைப் பார்த்த போது
'எருமை மாட்டிற்கு மான்
குட்டி எப்படி பிறந்தது?!'
என்ற பழைய கவிதை தான்
நினைவிற்கு வந்தது.
மான்குட்டி என்ற வர்ணனை
உனக்கு அதிக பட்சம்தான்
என்றாலும் எருமை மாடு என்பது
உன் அப்பனுக்கு மிகக்
குறைந்த பட்சம்தான். அந்த
கடையில் பில் போடுவதற்காக
இருந்த கம்ப்யூட்டரைத் தவிர
மீதம் இருந்த அனைத்தையும்
தின்று தீர்த்துவிடும் வெறி
அவரது கண்களில் மின்னியதை
நான் கவனிக்கத்
தவறிவிட்டேன். சரி எதையாவது
சாப்பிட்டுவிட்டு பேச்சை
துவங்கலாம் என சர்வரை
அழைத்தேன். அதன் பின்
உன் அப்பனின்
கைங்கர்யத்தால் சமையலறைக்கும்
டேபிளிற்கும் இடையே
சுமார் ஐம்பது
ஓட்டங்கள் எடுத்தான் சர்வர்.

ராயப்பாஸிலும்,
தலப்பாக்கட்டிலும், நீ புஃல்
கட்டு கட்டுவது உன் ஜெனிடிக்
பிரச்சனை என்பதைக்
கண்டுகொண்டேன்.
அவரது வேட்டையை முடிவுக்கு
கொண்டு வர இயலாதவனாக கையறு
நிலையில் இருந்த போது 'தம்பி
இப்பெல்லாம் முன்ன மாதிரி
சாப்பிட முடியறதில்லபா...
வயசாச்சில்ல..' என் தன்
திருவாய் மலர்ந்தார்.
திடப்பொருட்களிலிருந்து
ரோஸ்மில்க் பொன்ற திரவப்
பொருட்களுக்கு மாறினார்.
அப்பாடா, முடித்துவிட்டார்,
என்ற ஆசுவாசத்தை 'ஒரு கஸாடா'
என்ற வார்த்தையில்
உடைத்தார்.
'தம்பி எப்ப சாப்பிட்டாலும்
கடைசியா ஒரு ஐஸ் க்ரீம்
சாப்பிடுறது நல்லதுப்பா'
என்ற அவரது கூற்றில் இருந்த
கடைசியா எனும் வார்த்தைதான்
என் வாழ்வின் மீது
நம்பிக்கையை ஏற்படுத்தியது.
'சார், நான் உங்க பொண்ணை
விரும்புறேன்.அவளையே
கல்யாணம் பண்ணிக்க
ஆசைப்படுறேன். அது விஷயமா
பேசத்தான் உங்களுக்கு போன்
பண்ணினேன்' என்று மல்ல
பேச்சை துவங்கினேன்.
'தம்பி ! இது பெரிய விஷயம்,
ஒரு நாள்ல
பேசித் தீர்த்துவிட
முடியாது.நீங்க ஒன்னு
பண்ணுங்க.. நாளைக்கு
சாயங்காலம் அன்னபூர்ணா
வந்திடுங்க... அங்க பேசிக்கலாம்' என்ற உனது
தகப்பனை கொலை செய்ய அந்த
நேரம் துப்பாக்கி
இல்லாமல் போனது
என் துர்பாக்கியமே.

காதலியின் பதிலடி
முட்டாள் காதலனே !
இத்தனை நாள் நீ
பேக்கு என்று எனக்கு
மட்டும் தான் தெரிந்திருந்தது.
அதை என் வீட்ட்ற்கும்
வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாயே...
மான் குட்டியின் தந்தை
எப்படி எருமை மாடாகும்?
என் தந்தையும் கவரி மான் தான்...
உன்னை சந்திதது என் தந்தை அல்ல...
அடி முட்டளான உன்னை சோதிக்க
என் புத்திசாலி தந்தை
அனுப்பியது அவர் அலுவலக வேலைக்காரரை.....
காதலுக்கு தான் கண்ணில்லை....
உனக்குமா இல்லை....
யாரோ ஒருவனை என்
தந்தை என்று நம்பி உன்
பர்ஸை காலி செய்தாயே
என் பாசமிகு காதலா
என் தந்தையின் ஆசை
தனக்கு ஒரு புத்திசாலி
மருமகனாக வேன்டுமென்று...
என் தந்தைக்கும் வேறொருவனுக்கும்
வித்தியாசம் பார்க்க தெரியாத உன்னால்
வாழ்வில் நல்லது கெட்டது
பார்க்க தெரியாது
என்பது என் ததையின் எண்ணம்.
என் தந்தையின் தேர்வில்
தோற்றுவிட்டாயே ...
என் முட்டாள் காதலா...
இனியாவது பிறரை
நக்கலடிப்பதை விட்டு விட்டு
உன் பார்வையை மாற்று...
ஏதேதோ நிறைய வாங்கிகொடுத்து
எங்கள் வேலைக்காரரை
ஏமாத்திட்ட. அவரும்
உன்னை 'ரொம்ப நல்லவரு' ன்னு
சொல்லிட்டாருப்பா....
நாளையாவது என்
தந்தை வரும்போது இப்படி
பேக்கு மாதிரி இல்லாமல்
ஒழுங்காக நடந்து கொள்.
இல்லாவிட்டால், உன்னைக்
கொல்ல நான் துப்பாக்கி,
தேட வேண்டி இருக்கும்.

5.5.09

வரம் வாங்கி வந்தேன் - 2

சந்தானம் அலுவலகம் செல்ல தொடங்கினார். குடும்பம் ஓரளவு நல்ல நிலையை எட்டியது. இத்தனை நாள் வேண்டா வெறுப்பாக பழகிய உறவுக்காரர்கள். இப்பொழுது பாசத்துடன் பழகினர். இதற்கும் அந்த மூன்றாவது குழந்தையே போற்றப்பட்டது. ஒரு நாள் தனலக்ஷ்மி கற்பிணி என்பதை கண்ட குறி சொல்லும் பெண் காசுக்காக, அம்மணி சிங்ககுட்டி வரப் போறான், என்று மீண்டும் மீண்டும் அழுத்தி சொன்னாள். ஆத்திரம் கொண்ட தனலக்ஷ்மி பொறுக்காதவளாய், இங்க யாரும் உன் கிட்ட கேக்கல, வேற வீடு பாரு என்று கோபமாக சொன்னாள்.



சித்தி என்று அழைத்தவாறே உள்ளே நுழைந்தாள் மீனா. இவள் சந்தானத்தின் அண்ணன் மகள். இரு குடும்பத்திற்கும் பகை. காரணம், சந்தானத்தின் தாய் தங்கம்மாள். சில வருடங்களுக்கு முன்னர், கூட்டு குடும்பமாக தான் இருந்தனர். தனலக்ஷ்மி சற்று வறுமையான குடும்பத்து பெண் என்பதால், மூத்த மருமகளுக்கு அதிக உரிமைகள் கொடுத்தார், தங்கம்மாள். இதனால் தனலக்ஷ்மியின் மீதான கொடுமைகள் அதிகரித்தன. இதனை சந்தானம் பொறுக்க முடியாமல் தனி குடித்தனம் சென்றார். அத்துடன் இரு குடும்பங்களின் பேச்சு வார்த்தயும் நின்று விட்டது.தங்கம்மாள் சந்தானத்தின் வீட்டை மிதிப்பதில்லை என்று சபதம் செய்தார். இருப்பினும் மீனா மட்டும் தனலக்ஷ்மியின் மீதுள்ள பாசத்தினால் பேசுவாள்..



என்ன சித்தி சோகமா இருக்கீங்க என்றாள் மீனா. குறி சொல்லும் பெண் கூறியதை விவரித்தாள் தனலக்ஷ்மி. என்ன சித்தி, நீங்க வேணா பாருங்க தங்கச்சி பாப்ப்பா தான் பிறக்கும் என்று சவால் விட்டாள் மீனா. அதில் மகிழ்ந்தவளாய், அப்டி மட்டும் நடந்ததுனா உனக்கு என்ன வேணும்னாலும் வாங்கி தறேன் என்று உறுதி அளித்தாள் தனலக்ஷ்மி. பிரசவத்திற்கான நாட்கள் நெருங்கின.

சதீஷ்,சந்தோஷ் என்ற குரலுக்கு ஓடி வந்தனர். என்ன மா என்றான் சந்தோஷ், தனலக்ஷ்மியினுடைய மூத்த மகன். கெட்டிக்காரன்.இவன் செய்யும் குறும்புகளுக்கு அடி வாங்குவது சதீஷ் தான். சதீஷ் தனலக்ஷ்மியின் இரண்டாவது மகன். சுறுசுறுப்பானவன். சற்று கோபக்காரனும் கூட. அம்மா, அம்மாச்சி வீட்டுக்கு போறேன்.நீங்க ரெண்டு பேரும் அப்பாவுக்கு தொல்ல கொடுக்காம ஒத்தாசையா இருக்கனும். நல்லா படிங்க.சதீஷ் அழ தொடங்கினான். அழாத சதீஷ், அம்மா பாப்பாவோட வருவாங்க என்று பெருமையுடன் கூறினான் சந்தோஷ். அம்மா எனக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும் என்றான் சந்தோஷ். பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் தனக்கு அடுத்ததும் ஆண் குழந்தை தான் என்று நம்பினாள் தனம். ம்ம்ம்.. அப்பிடின்னா, சாமி எங்களுக்கு தங்கச்சி பாப்பா தான் வேணும்னு வேண்டிக்கோங்க.... அவள் சொன்ன மாத்திரத்தில் இருவரும் ஒரு சேர சாமி எங்களுக்கு தங்கச்சி பாப்பா குடு என்றனர். சிரித்துக்கொண்டே விடை பெற்றாள்.

பிரசவத்திற்காக மதுரையிலுள்ள தன் தாயின் வீட்டிற்கு வந்தாள் தனம்.பெண் குழந்தைக்காக அனைத்து தெய்வங்களிடமும் வேண்டினாள். இருப்பினும் ஆண் குழந்தை என்றாலும் பரவாயில்லை என்று தானே பக்குவப்பட்டாள். அம்மா வீட்டில் இருந்தாலும், எந்நேரமும் சதிஷ், சந்தோஷைப் பற்றியே நினைத்துக் கொண்டு இருந்தாள்.அவங்களே தனியா எல்லா வேலையும் பாக்கணும் என்று சந்தானத்தை நினைத்து புலம்பிக்கொண்டே, ஆள் இருந்தும் ஒத்தாசைக்கு வரமாட்டேங்குராங்க என்று தன் மாமியாரையும் கடிந்து கொண்டாள். ஒரு நாள் கொட்டாய்க்கு(திரையரங்கம்) போய் வருஷமாச்சு. போலாம்மா என்று தன் அம்மாவையும், அண்ணியையும் அழைக்க, அவள் ஆசையை மறுக்க முடியாமல் மூவரும் திரையரங்கம் சென்றனர். பாதி படத்தினூடே அவள் வலியை உணரவே மூவரும் மருத்துவமனைக்க்கு விரைந்தனர்.மூன்று மனி நேரம் சென்று அழகான குழந்தை பிறந்தது. அந்த வலி மயக்கத்திலும் மருத்துவரிடம் என்ன குழந்தை என்று ஆர்வமாக கேட்டாள் தனம்.
தொடரும்...


வரம் வாங்கி வந்தேன் - 1

தனலக்ஷ்மி நான்கு மாத கற்பிணி.கணவர் சந்தானத்துக்கோ நிரந்தரமில்லாத தொழில்.ஏற்கனவே இரண்டு மகன்கள் வேறு.இவள் கற்பிணியாக இருக்கும் செய்தி உறவினர்களுக்கும், அண்டை வீட்டார்க்கும் தெரிய வந்தது. மூணு வேள சோத்துக்கே வழி இல்ல. இவளுக்கு மூணாவது புள்ள கேடா? என்று நேராகவும் மறைமுகமாகவும் இழிப்பேச்சு பேசினர். இன்னும் ஒரு படி அதிகம் போய் ஒரு சிலர், கன்னு குட்டி மாதிரி ரெண்டு ஆம்பள புள்ளைங்க வச்சிருக்க. பேசாம கலச்சிடு என்று அறிவுரை(!!!) கூறினர்.

இவர்களின் பேச்சுக்கு செவி மடுத்தவளாய், குழந்தை வேண்டுமா என்று யோசித்துக் கொண்டே மருத்துவமனை நோக்கி நடக்கிறாள். பல்வேறு மனப்போராட்டத்திற்குப் பின் வேண்டாம் என முடிவு செய்து மருத்துவரை சந்திக்கிறாள்.டாக்டரம்மா நாலு மாசமா முழுகாம இருக்கேன். ஏற்கனவே ரெண்டு பசங்க வேற.இந்த கருவ கலைச்சு விட்ருங்க என்று கண்ணில் நீர் ததும்ப கூறினாள். மருத்துவர் பரிசோதித்து விட்டு, இங்க பாரு தனலக்ஷ்மி குழந்தை நல்ல வளர்ச்சி-ல இருக்கு,இப்ப கருகலைப்பு பண்ணா உன் உயிருக்கு தான் ஆபத்து. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் கருக்கலைப்பும் ஆபத்தான காரியமாக தான் இருந்தது.

மருத்துவர் மருத்துவிட்டதை அன்று இரவு சந்தானத்திடம் கூறினாள். எனக்கு என்ன ஆனாலும் பரவாலங்க.இப்ப நாம இருக்குற நெலமைல மூணாவது வேணாங்க என்று அழுத்தமாக கூறினாள். யார கேட்டு இப்டி முடிவு பண்ண? என் உடம்புல தெம்பு இருக்குர வரக்கும் என் புள்ளைங்களுக்கு நான் உழைப்பேன் டி.ஊர்ல யேசுனவுங்களா சோறு போட போறாங்க? .நீ இல்லாம என்னால இருக்க முடியுமா?நம்ம் பசங்கள பத்தி யோசிச்சியா? என்று சற்று கோபத்துடனே கூறினார் சந்தானம்.இப்ப ரெண்டு பசங்களுக்காக உழைக்கிறோம்.இனி மூணுக்கா உழைக்கலாம் என்று அவளை சமாதானம் செய்தார்.

தனலக்ஷ்மி, இன்னைக்கு பேங்க் கிளார்க் பரிட்ச.போய்ட்டு வரேன். நீ சாப்ட்டு தூங்கு. எனக்காக காத்திருக்காத என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தார் சந்தானம். இப்ப என்ன பரிட்ச என்று ஒன்றும் புரியாதவளாய் தன் வேலைகளை தொடங்கினாள்.மூன்று மாதம் கழித்து வங்கி தேர்வு முடிவுகள் வெளி வந்தன. சந்தானமும் தேர்வாகி இருந்தார். அவர்கள் இருந்த அதே ஊரில் உள்ள ஒரு அரசு வங்கியில் அவருக்கு வேலையும் கிடைத்தது.இப்பொழுது ஏசிக்கப்பட்ட குழந்தை யோகமாக பேசப்ப்ட்டது. அனைவரும் உன் குழந்தை பெறக்குறதுக்கு முன்னாடியே அப்பாவுக்கு கவுர்மென்ட் உத்தியோகம் குடுத்துருக்கு. யோகக்காரப் புள்ள என்று அதே ஊரார் இன்று வாழ்த்தினர்.இதை மகிழ்ச்சியுடன் சந்தானத்திடம் கூறினாள் தனலக்ஷ்மி. அடி போடி இந்த வேலைக்கு எத்தன நாள் கண்ணு முழுச்சேன்னு எனக்கு தான் தெரியும்.யோகமாம் யோகம் என்று நக்கலடித்துக்கொண்டெ படுத்தார். இருந்தாலும் அவர் மனதிற்குள் நெகிழ்ச்சி.இத விட சின்ன வேலைக்கெல்லாம் முயற்சி பண்ணேன். அப்ப எல்லாம் வேல கிடைக்கல. சும்மா பரிட்ச்ச மட்டும் எழுத்ப்பாக்கலாம்னு இருந்தேன். வேல கிடைச்சுருச்சு. ஒரு வேள இந்த குழந்தயின் ராசியா இருக்குமோ? என்று யோசித்துக்கொண்டே தூங்கினார்.
தொடரும்...

19.4.09

முனியம்மாவின் பயோடேட்டா...


முனியம்மாவின் பயோடேட்டா...

நிஜப் பெயர் : முனியம்மா

புனைப் பெயர் : சூப்பி

நிஜத்தில் : பாசக்கார பயபுள்ள

ஊர் : எங்க ஊர் தான்

தொழில் : எங்களின் நிதி அமைச்சர்

தெரிந்தது : கிறுக்க மட்டும் ( அத அவங்க டிராயிங் - னு
சொல்லிக்குவாங்க )

தெரியாதது : பிட் அடிக்க (ரொம்ப நல்லவன்னு தப்பா நினைக்க
கூடாது. பய புள்ள எப்ப பிட் அடிச்சாலும் மாட்டிக்கும்)

பிடித்தது : கோவில்பட்டி வீரலட்சுமியை குட்டுவது

பிடிக்காதது : நாங்கள் மற்றவர்களுடன் அரட்டை அடிப்பது

கற்றது : மீன் குழம்பு செய்யவும், பிரியாணி செய்யவும்

சமீபத்திய சாதனை : படிப்பில் 3 வது டிகிரி பெற்றதற்கு ட்ரீட்
கொடுக்காமல் டபாய்ச்சது.

நீண்ட நாள் சாதனை : நானும் வருவேன் ஆட்டத்தைக் கலைப்பேன் என்று எங்கள் ஆட்டையைக் கலைப்பது